மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ (1)
The jasmine-scented southern breeze cuts me; beautiful kuṟiñci melody makes me falter; evening’s departing rays bewilder; fine crimson clouds tear me apart. Our lotus-eyed Lord Kaṇṇan, bull of cowherds, lion among bulls, our mysterious one, embraced my breasts and shoulders. Alone, I know no refuge.
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? (2)
Alone, I know no refuge. The lamenting bell-like breeze and āmpal torment me; sandalwood and evening that strikes down day burn; the pañcama mode, jasmine, and cold wind afflict. The cowherd mystery fashioned and raised the broad world, swallowed, released, measured, and guards it everywhere; he is death to battling asuras, yet does not come. How can I remain and guard my life now?
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?
இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ (3)
How can I remain and preserve my life? Pressing my paired breasts until my slender waist trembled, the thief Kaṇṇan joined his body to mine in fierce union, then abandoned me and went far away. That solitary young lion, our mysterious one, does not return. His lotus eyes, red mouth, cool dark tresses, and four shoulders stand in sinful me’s mind and cut me apart.
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ (4)
They remain within sinful me’s mind and cut me apart. The cold north wind becomes a burning wind; the beloved cool moon becomes a hot moon; the soft flower-bed becomes a fiery bed. The divine bee with beautiful wings entered this flower of our womanhood. Every state surpasses what life can bear, and even our own heart is no companion.
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ
ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ
அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாரும்
எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ
யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்?
அவனுடை அருள்பெறும் போது அரிதே (5)
Our own heart is no companion; evening has become the hour when cows enter home. Is the heart of our cowherd made of stone? His sweet flute cuts me. Even the friends we call our support will die for him before us. How can we guard our precious life? The time of receiving his grace is hard to reach.
அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை
சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ?
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் (6)
The time of gaining his grace is hard to reach, and anything other than that grace is no grace. My life will not last until his grace arrives; I cannot bear the killing day, evening, or my heart. His sacred body, joined by Śiva, Brahmā, and the generous sacred Lady, cuts away our life. Mothers, where can I enter now? What shall I do, and to whom can I speak?
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ (7)
Mothers, to whom can I tell it? This sharp, cold wind exceeds what precious life can bear. Our raincloud-bodied thief Kaṇṇan stole my solitary heart, and it remains with him. The battling wind carries fragrant akil smoke, the pañcama of yāḻ strings, cool green sandal, and the new scent of cold jasmine, and hurls them against me.
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் (8)
It gathers fresh fragrance and strikes me; the swelling young wind is a baleful red fire. Our Kaṇṇan embraced and departed like a thief, but this wind’s theft is crueller than Kaṇṇan’s—and beyond it is that sweet flute. Setting pañcama amid honey-scented jasmine, gentle kōvai, and rich green sandal, he breathes sweet grace through it only for the cowherd women. I cannot survive.
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி
தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான் (9)
I cannot survive that sweet flute he plays. Through its utterance he speaks one thing; between phrases, his ornamented messenger-eyes say another. With pure-toned melodies he looks another message, assuming bewildering faces and grieving again and again; his song completely breaks the innocent heart. We understand none of it. Alas, alas—the evening has come, but the mysterious one has not.
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ
கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள்
மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? (10)
Evening has come, but the mysterious one has not. Great bells lament as mighty bulls arrive; beautiful fine cows see them and leap. Cruel flutes babble; bees hum, shaking jasmine and dark mullai buds growing with white light; the ocean splits open and cries into the sky. Abandoned by him, what can I say to survive here?
அவனைவிட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே (11)
Moved by the evening lament of ornamented cowherd women who cannot sustain life apart from him, and grieving over separation from him, Māṟaṉ Caṭakōpa of beautiful Kurukūr spoke these ten within his thousand upon the one who swallowed and released the earth. Servants, take them, cry aloud in this world, approach that spoken garland, worship, and be saved.