இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும்
இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில்
சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும்
நாள்களும் ஆகும்கொலோ? (1)
Our Lord sits graciously beside the beautiful lotus Lady, who brings delight, and joyfully rules all seven worlds so that they flourish in happiness. Will days come when I may lovingly reach sacred Āṟaṉviḷai, encircled by lovely groves where he delights to dwell, circle it in love, and worship with folded hands?
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
கைதொழக் கூடும்கொலோ? (2)
Will it truly happen, beyond all doubt? The sacred dwarf Father rose until the entire broad expanse became the measure of his two feet. He dwells in sacred Āṟaṉviḷai, where lofty walls enclose long mansions whose banners gleam in the sky. May I sprinkle richly fragrant water, circle him, and worship with folded hands?
கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
மதுசூதனை கோளரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து
ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)
Will it be granted each morning—to behold Govinda, Madhusūdana, the man-lion upon the soaring bird, and worship with folded hands? Will I unfailingly worship long-groved sacred Āṟaṉviḷai, his abode, where celebrated masters of the four Vedas, five sacrifices, and six limbs dwell?
வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
மலர் அடிப்போதுகளே? (4)
Will it be granted that I may keep them here in my mind always and at every moment—the lotus-feet of jewel-hued Lord Kaṇṇan, sovereign of the three worlds, born in northern Mathurā? He abides in sacred Āṟaṉviḷai, ringed by fields where sugarcane and great red paddy flourish.
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன்
அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம்மேல் வினை
ஒன்றும் நில்லா கெடுமே. (5)
Set the blossoming flowers of his feet within my heart and worship them always. The serpent-couched Father, who has bestowed grace before many servants, dwells in sacred Āṟaṉviḷai amid tall walls and long, flowerlike jeweled mansions. Sing his fame, abundant throughout the world, and no deed will remain upon us; all will perish.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
தொழுமின் தொண்டீர்!
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை
அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப
உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும்
நீள் நகரம் அதுவே (6)
Every cruel deed will perish without one remaining; contemplate him and worship, servants! Once he prevailed in battle and embraced the beautiful, long shoulders of Lady Rukmiṇī. The Lord whom my heart praises always and at every moment dwells within me; he stands in the long and beautiful city called sacred Āṟaṉviḷai.
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
அன்றி மற்று ஒன்று இலமே (7)
That very long city is sacred Āṟaṉviḷai, surrounded by flower-groves. Its indwelling Lord is Great Māl, Kaṇṇan, king of heaven. He entered Bāṇa’s city, fought fierce wars until the three-eyed Lord withdrew, and severed Bāṇa’s thousand arms. Apart from his refuge, we have nothing else.
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று
அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின்
நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில்
சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை
உள்ளத்தின் சார்வு அல்லவே (8)
“We have no other; your refuge alone!” cried the elephant from within the vast, broad pond, standing and praising his lofty ankleted feet. The Lord relieved the anguish in his heart. He came and now dwells joyfully in grove-rich sacred Āṟaṉviḷai. If we unite with it and circle it, will cruel deeds not cease to cling within?
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி
தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த
தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில்
திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்?
என்னும் என் சிந்தனையே (9)
Even if cruel deeds no longer cling to the heart and one is fit to ascend the clear sky, my thought asks only this: will I reach sacred Āṟaṉviḷai, grove-filled place where all come and worship—constant in tongue, heart, and every act—lovingly circle it, and fold my hands?
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)
Once one belongs to the purifier who dwells in heart-delighting sacred Āṟaṉviḷai—where hosts of earthly gods worship with thought, word, and deed—the Lord of the gods knows that such a mind turns toward nothing else. There is no mystery wrought by thought that he does not know.
தீர்த்தனுக்கு அற்றபின் மற்று ஓர் சரண்
இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி செழுங்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
உரைப்பர் தம் தேவியர்க்கே (11)
Knowing that after reaching the purifier there is no other refuge, Caṭakōpa of fertile Kurukūr made his mind pure for the purifier alone and spoke a thousand purifying verses. Every day the gods will honor those who master these ten as sacred waters themselves, offer them gifts, and tell their own goddesses of them.