தேவிமார் ஆவார் திருமகள் பூமி
ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
வேண்டு வேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
அப்பனே காணுமாறு அருளாய் (1)
Your divine queens are Śrī and Earth; at your command the other immortals serve. The three worlds are your beloved realm, and every form anyone desires is your form. Jewel with lotus eyes and coral lips that assails sinful me, my life, my nectar, Father who churned the surging sea—grant me the way to behold you.
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா
தொண்டனேன் கற்பகக் கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ்
பெரு நிலம் எடுத்த பேராளா (2)
Again and again I cry, “Grant that I may see you,” distraught, deed-burdened, my eyes tossing with tears. Grant me, alas, to cherish everything worthy of love and babble only your names. Grant me sight, Kakutstha, Kaṇṇan, wish-fulfilling fruit of your servant, nectar to those who cherish you, great giver who raised the vast water-girt earth.
எடுத்த பேராளன் நந்தகோபன் தன்
இன் உயிர்ச் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம் களிறே
அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக்
கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே? (3)
Little son, very life of generous Nandagopa; young elephant of the clan, Yāśodā’s intimate, supreme delight; great Master of your servant! Our ocean, whose hand-nails once ruled the battle-fierce asura’s body and split it in two—unless you come today in some form near at hand, how will your own people gain certainty?
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
என்னுடை ஆர் உயிரேயோ (4)
Whatever form your people desire and delight in becomes your form, and those who love you perform the deeds in which they delight and rest—this is your wonder. Deed-burdened, I doubt my own understanding. Master who arranged the war and extinguished the encircling armies across the broad land, nectar of the immortals, poison of asuras, my insatiable life!
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு
உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்!
உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)
O precious life who fashioned the entire broad expanse, raised it, swallowed, released, and measured it! O great life who made the immense waters, rested there, churned them, dammed and broke them! Glorious life, as gods are to humans you are God even to the gods—the one life of every world. Where can I come and reach you?
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
ஏழ் உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே
அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே
வான் புலன் இறந்ததும் நீயே (6)
Where can I come and reach you, ruler of me? You are all seven worlds; you are the gods appointed there for their inhabitants; you are every deed belonging to each. If things exist beyond and swell outside them, are they too not you? You are clouded knowledge and its clarity; you are what transcends the mighty senses.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னை தோள் மணந்த பேர் ஆயா (7)
You are what has passed, what confronts us, and what happens now. Deed-burdened, I doubt every judgment that your excellent nature is “this, that, or the other.” You are ghee drawn from milk and the sweetness within the ghee; nectar within the ocean, the sweetness born within nectar, and the fruit of that taste—great cowherd who embraced Nappiṉṉai’s shoulders.
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும்
செய்கையும் யானும் நீ தானே (8)
Great cowherd bridegroom, you possess the qualities that, through wonder, draw deed-burdened me completely apart. You are death to mighty-handed asuras and raise the fierce bird-banner; you recline upon the green serpent with a thousand hoods and rest upon the Milk Ocean. I know no way to worship: my mind, words, actions, and I myself are only you.
யானும் நீ தானே ஆவதோ மெய்யே
அரு நரகு அவையும் நீ ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை
நரகமே எய்தில் என்? எனினும்
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!
அருளு நின் தாள்களை எனக்கே (9)
It is true that I too am you; even the terrible hells are you. What if I gain heaven’s lofty joy, and what if I reach hell instead? Yet whenever I clearly recognize that I am you, I still greatly fear entering hell. You sit enthroned forever in heaven’s exalted delight—graciously grant your feet to me alone.
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
தந்த பேர் உதவிக் கைம்மாறாத்
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை
அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
தமியனேன் பெரிய அப்பனே (10)
In return for the vast help by which you gave your feet to me alone, ever more gloriously, I embraced your shoulders to fullness and offered my life as the entire price, O Light. Thousand-shouldered, thousand-crowned, with a thousand paired lotus eyes, a thousand feet, and a thousand names—great Father of solitary me!
பெரிய அப்பனை பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன்
பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால்
உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)
He is the great Father, Brahmā’s Father, Rudra’s Father, the Father who belongs to sages, the Father of immortals, the one unequaled Father of the world. Of the thousand cherished by generous Caṭakōpa of great, bountiful Kurukūr, these ten form a fitting word-garland. Through them, servants, we may be saved.