நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் சிவன் ஆய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)
You became water, earth, fire, wind, and measureless sky; the two glorious lights, Śiva, and Brahmā. Bearing the keen-edged discus and white conch, come to deed-burdened me for a single day, while earth and heaven rejoice.
மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே (2)
For earth and heaven to rejoice, you became the dwarf, displayed your might, and possessed both earth and heaven—mysterious Master! Draw near and walk through this world one day, so that I may approach, behold you with delight, and dance.
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ? (3)
Walking, standing, reclining, and sitting here in the world, through age after age and very many days you guard its lives. Shall I, your servant, languish still for many more days without joining you beside the beautifully formed, sacred great Lady?
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே (4)
With your sacred foot you ruled the cart-demon’s body, making it weaken, break apart, split into pieces, and perish—supreme Lord! Come one day, visible in the heavens, shining while Brahmā, Śiva, Indra, and the gathered celestials throng around you.
விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி
யுள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)
You abide above the heavens, stand upon the mountain, reach the ocean, and roam the earth; hidden, you dwell within them all. You are the outer cosmos beyond all reckoning. Dancing deep within my life, will you hide without revealing your form?
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? (6)
One far-striding foot covered all the ocean-bound earth beneath it; with the other you reached through every world. Mysterious one, must I roam this world for endless days, suffering to behold you, like wax joined to flame?
உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே (7)
You are the course of deeds that wander through the world, the world itself, and the one life of the world; beyond the cosmic shell you are the formless one shining as all ten immeasurable directions. Grant grace to me, whose understanding has no such radiance.
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே? (8)
Grant grace to ignorant me: you have become the life of those who know, a form of intoxicating radiance—my Great Māl, whose servant I am. Will you still deceive me, cast me outside, and bring me to ruin, leaving the soul of your servant bewildered when it knows nothing else?
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? (9)
Will you lay sinful me low by displaying countless petty pleasures, while the five senses assail and bewilder my life? Has the time not yet drawn near when those broad lotus feet that strode across the world will call me and take me in?
குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே? (10)
Even were I joined to boundless bliss through an age that neither contracts nor lengthens, never reaches an end, neither diminishes nor increases—could it equal the briefest moment of belonging solely, without return, to you, mysterious one? Alas, I do not know.
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே (11)
Caṭakōpa, servant of the servants of the servants who belong to Tirumāl—whom discernment, remembrance, and thought cannot encompass—made him known in a thousand. These ten make their reciters the rightful servants of the one who swallowed the world.