உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே (1)
“The rice we eat, the water we drink, the betel we chew—all are Kaṇṇan, our Lord.” So she repeats, her eyes filling with tears. Asking here on earth for the town where his glorious abundance dwells, my young doe will surely enter Tirukkōḷūr.
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே? (2)
Town, country, and world have become, like her own self, possessions of his; she babbles only his names and garlands, stumbling beyond the lofty bounds of modesty. Will she truly go to Tirukkōḷūr, whose fertile fields brim with gracious plenty? Tell me, flowering creepers and pūvai birds of wretched me.
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3)
Her pūvai birds, green parrots, ball, game-board, flower-baskets—everything rises calling Tirumāl’s sacred names. My doll-like girl has now gone toward Tirukkōḷūr and its cool fields. What can she do there, her kōvai-fruit lips trembling and her rain-cloud eyes pouring tears?
கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே (4)
Will the sharp-tongued women of the neighboring quarter call her shameless, or say that her virtues are great? Alas! My young doe has chosen to go to prosperous Tirukkōḷūr, where he reclines, her fine waist swaying beneath her.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5)
My little goddess chose him and, wasting day after day, would no longer play. Now she has gone to her Tirumāl’s Tirukkōḷūr. When she sees its flowering groves, broad pools, and his temple today, how will she rejoice as life itself grows cool within her?
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே (6)
Today my young doe left, giving me no help, and went to Tirukkōḷūr, the tilaka adorning the southern quarter. There she will behold her Tirumāl’s sacred eyes and red lips; standing and standing, she will languish, frostlike tears filling her long eyes.
மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7)
Her eyes flood, her heart is overcome with love, and night and bright day she calls, “Great Māl!” Now she has gone toward prosperous Tirukkōḷūr, where he reclines. Exhausted, faltering step after faltering step, how will she ever enter it?
ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே? (8)
Will she walk with one hand upon her weakened, slender waist, suffering at every step, heart dissolved and eyes spilling tears, toward Tirukkōḷūr of the Lord of the radiant lotus Lady? Our beautiful girl abandoned us with her own heart melted through.
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே (9)
Whenever she saw anything good, she would set it aside, saying, “This is for my Kaṇṇan.” Leaving all this now, the perfectly adorned girl has walked to Tirukkōḷūr while the many quarters shout their slander. She did not think of us at all.
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே (10)
Gods, I cannot comprehend it: my long-eyed young doe has gone. She will not leave the lotus-eyed sovereign of all the worlds even for the measure of a millet seed. Fixing herself on Tirukkōḷūr where he dwells, she departed without considering the towering reproach that would fall upon our house.
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)
Caṭakōpa of Kurukūr, encircled by groves of clustered blossoms, cried out to Madhusūdana, the great treasure laid safely away. Of his thousand arranged as ten hundreds, these ten belong to Tirukkōḷūr where the Lord dwells. Those who recite them with minds fixed there will rule the radiant golden world.