முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே? (1)
Our cloud-hued Lord who created the world of three waters, I wander along the course of the body you once gave. When will scorching illness perish, karma be struck out by the root, and I come at last to unite with you?
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)
Our Vāmana who measured the mighty world, I sink through the many births of your manifold, immense māyā. When will I sever at the root the links of ancient, overpowering karma and stand joined to your great feet?
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே (3)
Father, with a great staff that should not kill, you brought death in the Bhārata war and consumed every army upon the two-sided field. Tell me the means of cutting my union with this wicked body—the strategy by which I may reach you.
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே (4)
Father, ever the luminous flame of all-encompassing knowledge, filling everywhere without rise or fall—come and grant the way by which every low state is removed and I attain life beneath your paired feet.
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே? (5)
You came as though truly coming, yet do not keep my mind from scattering. If this is how it must be, Father whose sacred color is the rich blossom of clustered kāyā flowers, where can I come to approach you?
கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே? (6)
In former days I never distinguished, “I can do this; I cannot do that.” I tasted trivial essences and wandered away. Supreme One who fashioned many thousands of lives, when will I draw near your good, gold-radiant feet?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே (7)
Heart, we sit and sit, lamenting always, submerged without true knowledge in karmic birth. When shall we reach Kṛṣṇa, the Radiance of true knowledge who stands forever everywhere, filling all without a gap?
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? (8)
I have not abandoned deeds that bring suffering; I have not worshipped your ankleted feet without interruption. Kṛṣṇa of ancient, spreading glory, my Supreme Light—I call to see you. Where must I arrive to call you forth?
கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)
Calling and calling from within the heap of cruel karma, I the sinner have wandered bewildered for ages, unable to find the road. Where now shall I encounter our Lord who once lovingly guarded the cattle and strode across all worlds?
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே (10)
When the appointed time comes and Yama’s servants cast their noose, all the affliction that strikes and consumes will depart. My heart, having seen Kṛṣṇa—the knowledge within all arts—gained firm standing and enduring life.
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே (11)
Śaṭhakopa of southern Kurukūr, where cuckoos inhabit the groves, wove this faultless musical decad within a thousand for the Owner of every soul and world. It ends the fleshly body’s dominion over life.